உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி குறைபாடுகளைக் கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மேலவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக நகர் செயலாளர் கே.கே. அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான டாக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், “ஆன்மீகத் தலைநகராகத் திகழும் ராமேஸ்வரத்தில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வணிக நோக்கில் செயல்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யப் பயன்படுத்திய பாரம்பரிய வழியை அடைத்து, கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார். கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீர் இறைக்கும் பணியாளர்களுக்குப் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றாம் பிரகாரத்தில் காலம் காலமாக நடைபெற்று வந்த கங்கை நீர் அபிஷேக நடைமுறையைத் தடையின்றி மீண்டும் தொடங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பார்வையை மறைக்கும் வகையில் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்ற வேண்டும். சேது மாதவர் மற்றும் காலபைரவர் சன்னதிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். பாலாலயம் செய்யப்பட்டுப் பல மாதங்களாகியும் கிடப்பில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டும்.
மேலும், கோவில் கோபுரங்களில் உள்ள மின் விளக்குகள் பல எரியாத நிலையில் உள்ளதால், இரவு நேரங்களில் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், திரளான மகளிர் அமைப்பினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். முடிவில், அம்மா பேரவை செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

















