ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும் அபூர்வ மரகத நடராஜர், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே சந்தனம் களைந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பதால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் குவிந்தனர். ஆனால், பக்தர்களின் பக்திப் பெருக்கிற்கு மத்தியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் காவல்துறையினரின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் ‘அட்ராசிட்டி’ காரணமாகப் பெரும் அதிருப்தி நிலவியது. குறிப்பாக, வரிசையில் காத்திருந்த பொதுமக்களையும், வி.வி.ஐ.பி. (VVIP) அந்தஸ்து பெற்றவர்களையும் அவமதிக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடு அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் முக்கியப் பிரமுகர்களுக்காக வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி. பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருந்த உள்ளூர் போலீசார், முறைப்படி பாஸ் வைத்திருந்தவர்களை வெயிலில் காக்க வைத்துவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் மற்றும் சிபாரிசுடன் வந்தவர்களை எவ்வித அனுமதியுமின்றி குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், உரிய அனுமதிச் சீட்டுடன் வந்தவர்கள் கூட கடும் வெயிலில் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். 250 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் போதிய நிழற்குடை வசதி இல்லாததால், பல மணி நேரம் காத்து நின்ற சில பக்தர்கள் மயக்கமடைந்த சோகமும் நிகழ்ந்தது. இதனைத் தட்டிக்கேட்ட பக்தர்களிடம் போலீசார் அதிகார தோரணையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் அலைபேசியைப் பறித்துவிடுவோம் என மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குளறுபடிகள் குறித்து சம்பவ இடத்திலிருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தீஷிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது, அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சத்திரக்குடி எஸ்.ஐ. ஒருவர் செய்தியாளர்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டியபோது, அந்த அதிகாரி எஸ்.பி. முன்னிலையிலேயே உரத்த குரலில் எதிர்த்துப் பேசியும் அவர் கண்டுகொள்ளவில்லை. “போலீசார் ஓய்வின்றிப் பணியாற்றுகிறார்கள், செய்தியாளர்களுடன் நல்லுறவை விரும்புகிறேன், எல்லாமே சரியாகத்தான் நடக்கிறது” என்று கூறி எஸ்.பி. அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் அங்கிருந்த வரை ஓரளவு ஒழுங்கு பராமரிக்கப்பட்டாலும், அவர் சென்ற அடுத்த நிமிடமே போலீசார் மீண்டும் தங்களுக்கு வேண்டியவர்களைக் குறுக்கு வழியில் உள்ளே அனுப்பும் ‘ஏமாற்று’ வேலையைத் தொடர்ந்தனர். ஒரே ஒரு பாஸை வைத்துக்கொண்டு பலரை உள்ளே அழைத்துச் செல்லும் தந்திரத்தையும் சில போலீசார் கையாண்டனர்.
பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை விடத் தங்கள் உறவினர்களுக்குச் சலுகை காட்டுவதிலேயே உள்ளூர் போலீசார் குறியாக இருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. “உள்ளூர் போலீசாரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தினால் இது போன்ற சிபாரிசு தரிசனங்களைத் தவிர்க்க முடியாது. எனவே, வரும் ஆண்டுகளில் கோயில் உட்பிரகாரப் பணிகளுக்கு வெளி மாவட்ட அல்லது வெளி ஊர் போலீசாரை மட்டுமே நியமிக்க வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் திரளும் இத்தகைய புனிதமான விழாவில், காவல்துறையினரின் இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்பாடு ஆன்மீகப் பயணத்தைச் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

















