வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு எம்பி கனிமொழி தலைமை வகிக்கிறார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக, தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்துள்ளது. கனிமொழி தலைமையிலான இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, மக்களின் கருத்துகளை அறிக்கையில் இடம்பெறச் செய்ய உள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி. செழியன், தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, திமுக அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மற்றும் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

















