மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2025 வரை நடைபெற்ற 15 ஆண்டுகளில் மொத்தம் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட ஏழு வனச்சரகங்களை கொண்ட இந்த கோவை வனத்துறையில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழையும் யானைகளின் எண்ணிக்கை அண்மிக் காலங்களில் அதிகரித்து வருவதால், மனித–யானை மோதல் நீடித்த சவாலாக உள்ளது. 202 யானைகள் நோய், வயது முதிர்வு உள்ளிட்ட இயற்கை காரணங்கள் 30 யானைகள் – மனிதச் செயலால் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான காரணங்கள் (நாட்டு வெடி, மின்சார தாக்குதல் முதலானவை) 2023 அதிகபட்சமாக 23 யானைகள் பலி 2024 குறைந்தபட்சமாக 8 யானைகள் வருடாந்திர சராசரி 15 யானைகள் நடப்பு 2025 இதுவரை 13 யானைகள், அதில் 10 இயற்கை மரணம் 3 இயற்கைக்கு மாறான காரணங்கள் வனத்துறை அதிகாரிகள் விளக்கம்: யானைகளின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய வன கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்துகின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோத மின்வேலி, நாட்டு வெடி தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. மலையோர கிராம மக்களுக்குள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. யானைகள் வலசை வரும் பாதைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுவதாவது: “கோவை வனக்கோட்டத்தில் யானைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வலசை யானைகளும் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. பெரும்பாலான மரணங்கள் இயற்கையானவை. மனிதச் செயலால் ஏற்படும் மரணங்கள் குறைந்த அளவில் உள்ளன.”



















