தலைநகர் சென்னையில் இரண்டு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், திமுக ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்யமாக சென்னை மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பாரிமுனையில் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே கத்திகளுடன் இரு ரவுடிக் கும்பல் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களால், மக்களுக்கு எங்கும் எப்போதும் பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது என்றும், ரவுடியிசத்தைக் கண்டு, மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத, ஸ்டாலின் அரசின் சாதனை என்று முதலமைச்சர் விளம்பரம் செய்து கொள்ளலாம் என்றும் இபிஎஸ் கூறியுள்ளார். சென்னையில் தலைவிரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


















