மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை, 5 நாட்களுக்கு பிறகு துவங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக, உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். மலைக்கு நடுவே மிதமான வேகத்தில், ரயில் இயக்கப்படும் என்பதால், இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்யலாம்.
இதனிடையே, கடந்த 19-ந்தேதி கனமழை காரணமாக, ஹில்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள், கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.
இந்த பணிகள் நிறைவு பெற்றதால், இன்று காலை முதலே, மீண்டும் ரயில் சேவை துவங்கி இருக்கிறது. காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், உதகைக்கு பயணம் செய்தனர்.
















