அதிமுக ஒன்றிணைவு குறித்து “10 நாட்கள் கெடு” என்ற செய்தி தவறானது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் எனவும், அதற்காக 10 நாட்கள் கெடு அளித்ததாகவும் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தெரிவித்திருந்தார். அந்த அறிக்கைக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் செங்கோட்டையனின் கருத்தை வரவேற்றனர். ஆனால் அதற்கடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒன்றிணைப்பு குறித்து ஆலோசித்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நான் அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் எனத்தான் கூறினேன். முடிவு ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ எடுக்கலாம் என்று சொன்னேன். ஆனால் ஊடகங்களில் தவறாக வெளிவந்துவிட்டது,” என விளக்கம் அளித்தார்.
அதிமுக ஒன்றிணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விரைவில் நல்லது நடக்கும்,” என்று கூறியுள்ளார்.

















