டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. மேலும், ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 300–400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டேராடூனில் கடுமையாக பாதிக்கப்பட்ட மால்தேவ்தா மற்றும் கேசர்வாலா பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
“கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்று முதல்வர் தாமி தெரிவித்தார்.















