புதுடில்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது.
எத்தனால் என்பது புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருள். இதனை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைவதோடு, விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்கும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 5 ஆண்டுகள் முன்னதாகவே 20 சதவீத எத்தனால் கலப்பு சாதனையை இந்தியா எட்டியுள்ளது.
ஆனால், சமூக வலைதளங்களில் “எத்தனால் கலப்பு வாகனங்களின் மைலேஜ் குறைக்கும், என்ஜினுக்கு சேதம் விளைவிக்கும்” என்ற வதந்திகள் பரவின. இதை திட்டவட்டமாக மறுத்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என அறிவித்தது.
இந்நிலையில், “எத்தனால் கலந்த பெட்ரோல் வாகன இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, எத்தனால் இல்லாத பெட்ரோலையும் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்” எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷதன் பராசத் வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி, “இந்த முடிவு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், கரும்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும் பெரும் பலன் அளிக்கும்” என வலியுறுத்தினார்.
இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.