திருச்சி : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக அவமரியாதையாக பேசிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியும், இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் மேயர் அன்பழகன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று தி.மு.க.வை சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், 57வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முத்துச்செல்வம், “சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூ-வீலர் நிறுத்தம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு மறு ஏலம் விட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மேயர், “முறைகேடு ஏதும் நடக்கவில்லை; மாறாக 3 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆதரவாக, 55வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ், “மக்களுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படாததால், அவர்கள் தாங்களே இணைப்பு எடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
உடனே மேயர், “இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதால் தான் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. இப்போது நீங்கள் சொன்னதால், அந்த இணைப்பு கொடுத்தவர்மீது மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும்” என எச்சரித்தார்.
இதையடுத்து கடுப்பான ராமதாஸ், “நீங்கள் மேயர் பதவிக்கே லாயக்கில்லை” என்று வசைபாடினார். இதனால் ஆத்திரமடைந்த மேயர் அன்பழகன், “கவுன்சிலர் ராமதாஸ் இரு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என்று அறிவித்தார்.
பின்னர் மேயரின் உத்தரவின்படி, ராமதாஸ் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.