சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 49வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி திறந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களின் வசதிக்காக போதிய கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புத்தகக் காட்சிக்குள் 15 ஏடிஎம்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக தினமும் மாலை நேரங்களில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதிய ‘திருப்பரங்குன்றம் – முழு வரலாற்று ஆய்வு’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

















