விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய ஒருங்கிணைந்த தற்செயல் விடுப்பு இன்று நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நோக்கி பேரணியாகச் சென்று, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடல் மைதானத்தில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கூட்டமைப்பின் சார்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடைமைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும்,
அனைத்து காலியான பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்,
களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் பணிக்கு அழைக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும்,
அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.