மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பூர மஹோற்சவ விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் திருநாளில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஅபிராமி அம்மன், விநாயகர் சண்டிகேஸ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீவாராதனை எடுத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
