மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது. சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.

ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் காவிரியில் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்லணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீரையும் முதலமைச்சர் நேரடியாக வந்து ஜூன் 15ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், காவிரி நீர் இன்று மதியம் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமண் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் வந்தடைந்தது. நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் உதவி பொறியாளர் யோகேஷ் தலைமையில் பொதுமக்கள் காவிரி அன்னையை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்து நொடிக்கு 800கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.