சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்காக ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட திட்டத்தின் செயல்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- விபத்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்தர ஊனமடைந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு.
- விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள ஒரு மகளுக்குத் ரூ.5 லட்சம், இரு மகள்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை திருமண நிதியுதவி.
- சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகள் ஒருவர் உயர்கல்விக்காக கல்வி பயின்றால், ரூ.10 லட்சம் வரை உதவி தொகை.
- இயற்கை முறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியருக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் தமிழக அரசு மே 19, 2025 அன்று ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:
இந்நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் தற்போதைய வங்கிக் கணக்கை புதிய காப்பீட்டுத் திட்டத்திற்காக மாற்ற, அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கணக்குப் பிரிவு சார் ஆட்சியர் வழியாக, வங்கியில் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் மற்றும் பாஸ் புக், ஊழியர் அடையாள அட்டை, ஏப்ரல் 2025 சம்பள சிளிப், ஆதார் மற்றும் பான் அட்டை நகல்கள் வழங்க வேண்டியதாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, எதிர்பாராத நிகழ்வுகளின் போது அவர்களின் குடும்பத்தினருக்கு நிதிநிலை சுமை ஏற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.