கத்தாரின் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்றிரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டின் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் ஈரானின் ஏவுகணை தாக்குதலை முறியடித்து, உரிய பதிலடி தரப்பட்டதாக கத்தார் ராணுவம் விளக்கமளித்தது,
இதனிடையே, ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த 12 நாட்கள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாகவும், இன்னும் 6 மணிநேரத்தில் போர்நிறுத்தம் தொடங்கி 24 மணிநேரத்திற்குள் போர் முழுமையாக முடிந்து, அமைதி திரும்பும் என்றும் தெரிவித்துள்ளார். 12 நாளாக நடந்த போர் நிறுத்தம் என்பது உலகின் மரியாதைக்குரியது என்று தெரிவித்துள்ள டிரம்ப் இரு நாடுகளுக்கும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, இப்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ராணுவ நடவடிக்கைகளுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வரை, ஈரானும் தாக்குதல் நடத்தும் எனவும் ஈரான் அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.