கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்துபயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், காவல் துறையினரே பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள். அந்த வகையில், இந்தாண்டுக்கான ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை, சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரை என, இரு குழுவாக பாதுகாப்புப் படையினர் அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கடலோர பகுதிகள் மட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜூகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடலில் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் கண்காணிக்கும் வகையில் ஒத்திகை நடந்து வருகிறது. நாளை மாலையுடன் ஒத்திகை நிறைவடைகிறது.