சேலம் : சேலம் நகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமர் கோவில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தவறான பதில்கள் அளித்ததால் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் குபேந்திரன், அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார். இவர் அப்பகுதியில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, குபேந்திரனை கைது செய்தனர்.