சென்னை : சென்னை மாநகராட்சியின் புது நடவடிக்கையாக, நகரில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு இதுவே முக்கிய அங்கமாகும்.
மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின் படி, வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், திருவிக நகர் (புளியந்தோப்பு), தேனாம்பேட்டை (லாயிட்ஸ் காலனி), கோடம்பாக்கம் (கண்ணம்மாபேட்டை), சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் (மீனம்பாக்கம்) ஆகிய ஐந்து மண்டலங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தினசரி:
புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை – தலா 30 நாய்களுக்கு
மீனம்பாக்கம் – 15 நாய்களுக்கு
சோழிங்கநல்லூர் – 10 நாய்களுக்கு
கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல, மாநகராட்சியின் 10 மண்டலங்களில் ஒவ்வொரு நாளும் தலா 30 நாய்களுக்கு சிகிச்சைகள் வழங்கும் 10 புதிய மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தெருநாய்கள் பிடிக்கும் பணிக்காக 16 வாகனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 நாய்கள் பிடிக்கும் பணியாளர்கள் உள்ளனர். மொத்தமாக 78 பேர் நாய்கள் பிடிப்பு பணியில், 23 கால்நடை உதவி மருத்தவர்கள் மற்றும் 4 மூத்த கால்நடை மருத்தவர்கள் சிகிச்சை தரத்தை கண்காணிக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2021 முதல் 2025 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 1,08,202 நாய்களுக்கு (அதில் 41,917 செல்லப்பிராணிகள்) வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
தெருநாய்கள் தொடர்பான நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க, ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி முன்னோட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ரூ.3 கோடி மதிப்பில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணி ஜூன் மாதத்தில் இருந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.