டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதை தொடர்ந்து, “தமிழ்நாட்டின் உரிமைக்காக சென்றேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அவர் மீது கடும் விமர்சனங்களை எட்டி வைத்துள்ளார்.
“தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா, இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் ‘நிதிக்காகவா’ டெல்லி சென்றீர்கள் என்பது தான் மக்கள் கேட்கும் முக்கியமான கேள்வி” என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி பெற்றது போல பில்ட்அப் கொடுக்க முயற்சி செய்வதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை மறைக்கவே நீங்கள் பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்” என்றார்.
மேலும், முதலமைச்சரின் குடும்பத்தில் இருக்கும் ரத்தீஷ் என்பவரை குறிவைத்து, “அவர் யார்? என்ன சொத்துகள் இருந்தன? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று அவரின் சொத்து மதிப்பு என்ன?” என தொடர் கேள்விகளை எழுப்பினார்.
“இத்தனை நாட்களாக உங்கள் அமைச்சர்கள் கதறிக்கொண்டிருந்ததைப் போதும் என்றீர்களா? இப்போது நீங்களே நேரில் களத்தில் இறங்கி கதறுவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ரசிக்கிறார்கள்” என்றும் அவர் எச்சரிக்கையுடன் கூறினார்.