தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், புதிய உற்சவர் சிலைகள் செய்ததில் அரங்கேறியுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மோசடி விவகாரம் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. கோயிலின் தொன்மையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலைகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய சிலைகளைச் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவெடுத்தது. இதற்காகப் பக்தர்களிடம் இருந்து சுமார் 312 சவரன் தங்க நகைகள் நன்கொடையாகப் பெறப்பட்ட நிலையில், அந்தத் தங்கம் தற்போது எங்கே போனது என்ற கேள்வி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகச் செய்யப்படும் ஐம்பொன் சிலைகளில் 5 சதவீதம் தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. இதற்காகப் பெறப்பட்ட 312 சவரன் தங்கத்தைக் கொண்டு சிலைகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தச் சிலைகளில் தங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறதா எனச் சந்தேகம் கொண்ட அண்ணாமலை என்ற பக்தர் 2017-ல் தொடர்ந்த வழக்கில், ஐஐடி (IIT) நிபுணர் குழுவினர் நவீனக் கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில், புதிய சிலைகளில் ஒரு மில்லி கிராம் தங்கம் கூடச் சேர்க்கப்படவில்லை என்ற திடுக்கிடும் தகவல் அண்மையில் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் அம்பலமானது. இது, தெய்வத்தின் பெயரால் பக்தர்களிடம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “பக்தர்கள் நம்பிக்கையுடன் வழங்கிய 312 சவரன் தங்கம் எப்படி மாயமானது? 2017-ல் பதிவான வழக்கில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட எப்.ஐ.ஆர் (FIR) தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டைப் போல, தமிழகத்திலும் இத்தகைய மோசடிகள் அறநிலையத் துறையின் கண்காணிப்பிலேயே நடப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த மோசடி குறித்துத் தனி நீதிபதி மூலம் விரிவான விசாரணை நடத்தி, மாயமான தங்கத்தை மீட்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் கூடுதல் கமிஷனர் கவிதா உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்த வழக்கு தற்போது காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளதால், மாயமான 312 சவரன் தங்கம் யாரால், எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வச் சிலைகளைச் செய்ததில் நடந்த இத்தகைய முறைகேடு, ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.














