“ஒருபெண்வெற்றிபெற்றால்ஒருசமூகமேவளரும்” – கோவையில்எஸ்என்ஆர்சன்ஸ்அறக்கட்டளையின் 42-வதுநிறுவனர்நாள்விழாவில்டாக்டர்ஏ.வேலுமணிநெகிழ்ச்சிஉரை!

கோவை மாநகரின் கல்வி மற்றும் மருத்துவச் சேவையில் அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தடம் பதித்து வரும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்என்ஆர் கலையரங்கில் சனிக்கிழமை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் மறைந்த மாமனிதர் எஸ்.என்.ரங்கசாமி நாயுடு அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வறக்கட்டளை, இன்று மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் 18 உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த மாபெரும் அறக்கட்டளையின் வளர்ச்சிப் பாதையைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நிறுவனர் நாள் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு விழாவிற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பல்வேறு கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் முதல்வர்கள் தங்கள் நிறுவனங்களின் சாதனைப் பட்டியல்கள் அடங்கிய ஆண்டறிக்கையை வாசித்தனர். விழாவின் சிகரமாக, தைரோகேர் (Thyrocare) நிறுவனத்தின் நிறுவனரும், ஏ.வி.எம். லேப்ஸ் மற்றும் ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் அதிபருமான டாக்டர் ஏ.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் கடந்த 25 ஆண்டுகளாகத் தங்களின் உழைப்பை அர்ப்பணித்த 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். குறிப்பாக, 400-க்கும் மேற்பட்ட சிக்கலான இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்த டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்திக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டபோது அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் எழுந்தது.

தொடர்ந்து மேடையில் உரையாற்றிய டாக்டர் ஏ.வேலுமணி, “ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை இவ்வளவு நேர்த்தியாக நடத்துவது என்பது ஒரே நாளில் நிகழ்ந்த அதிசயம் அல்ல. சமூகத்தில் அந்த அறக்கட்டளை சம்பாதித்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மை ஆகியவையே இந்த வெற்றியின் ரகசியம். வாழ்க்கையில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளத் தைரியமான முடிவுகளை எடுங்கள்; அதுவே உங்களை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். ஒரு ஆண் வெற்றி பெற்றால் அந்தக் குடும்பம் மட்டும் வளரும், ஆனால் ஒரு பெண் வெற்றி பெற்றால் அந்தச் சமூகமே வளர்ச்சியடையும்” என உருக்கமாகப் பேசினார்.

இந்த எழுச்சிமிகு விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தூண்களாகத் திகழும் இக்கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் இந்த விழா, ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version