“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !

நாடெங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தயார் மையமாக மாறியுள்ள ராஜஸ்தானின் கோட்டா நகரில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை தொடர்ந்து, இதுகுறித்த வழக்கு மே 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த அமர்வில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, கோட்டா நகரில் மட்டும் இந்த ஆண்டில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு, தொடர்ச்சியான கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

“கோட்டா நகரில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன் ?”
“மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?”
“முதல்தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய ஏன் நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது ?”
“மாணவர்கள் உயிரிழக்கும் அளவுக்கு மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?” என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சம்பவங்களில், ஒரு மாணவி தனது பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்தபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். மேலும், மே 4 ஆம் தேதி கரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கோட்டா பகுதியில் மாணவர்கள் தற்கொலை செய்வதற்கான காரணங்களை ஆராய, ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோட்டா நகர காவல்துறை அதிகாரி, வரும் ஜூலை 14ஆம் தேதி நேரில் ஆஜராகி, மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version