தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, கடந்த 10 ஆண்டுகளில் 2வது முறையாக வரும் செப்., 22- முதல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
சமூகநீதியை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இப்போது 2வது முறையாக நடத்தப்படவுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் ; மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று போலி சமூகநீதிப் புலிகள் கூறி வரும் நிலையில், மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் கூட, எங்கள் மாநிலம் சார்ந்த சமூக, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களைத் திரட்ட இக்கணக்கெடுப்பு அவசியம் என்று சித்தராமைய்யா கூறியிருப்பது பலரும் அறிய வேண்டிய பாடமாகும்.
இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் அடுத்த ஆண்டுக்கான கர்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இக்கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவைகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றுக்கும் மேலாகவே தமிழகத்திற்கான தேவைகள் உள்ளன.
கணக்கெடுப்பு நடத்துவதற்கான கட்டமைப்புகளும், வசதிகளும் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளன. ஆனாலும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது ?
எப்படி இருந்தாலும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான அணி வெற்றி பெறப் போவதில்லை. சமூகநீதிக்கு துரோகம் செய்து விட்டு ஆட்சியை இழந்தார் என்ற அவப்பெயருக்கு அவர் ஆளாகிவிடக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.