மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் முன்னிலையில் நடைபெற்ற ஶ்ரீ சுப்ரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 7ஆம் திருநாளான இன்று ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோயில் வெளி மண்டபத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தரளிய ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதர் முன்னிலையில் ஶ்ரீசுப்ரமணியசுவாமி தெய்வாணை எழுந்தருள செய்யப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு கங்கணம் கட்டி கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் ஶ்ரீசுப்ரமணியசுவாமி தெய்வாணைக்கு பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, 16 வகையான சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாள வாத்தியங்கள் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீபாரதனை எடுத்து வழிபாடு செய்தனர்.
