“234 தொகுதிகளுக்கு தகுதியான கட்சி நாங்கள் ; டீ, பனுடன் ஏமாற்ற முடியாது ” – திருமாவளவன்

சென்னை : “234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள் நாங்கள். எங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியும் என யாரும் எண்ணவேண்டாம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமூக மாற்றக் கட்சி என்ற அடிப்படையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கிவருவதாகவும், வெறும் ஜாதி அல்லது மத அடிப்படையிலான அரசியலை கடந்த ஒரு தேசிய பார்வையுடன் கட்சி செயல்படுவதாகவும் கூறினார்.

“அம்பேத்கரின் கனவை நனவாக்கும் இயக்கம் நாங்கள். எதிராகவோ ஆதரவாகவோ எங்களைப் பற்றி பேசுங்கள்; ஆனால் நாங்கள் தேசத்தை புதுப்பிக்க போராடுகிறோம்” என அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் போட்டியிடக்கூடிய வலிமையுடன் இருக்கிறோம்”

தற்போது தேர்தல் நேரத்தில் ஊடகங்கள் “எத்தனை இடங்களில் போட்டியிடப்போகிறீர்கள்?” என்ற கேள்விகளை முன்வைப்பது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், “அவர்கள் இன்னும் சிறுத்தைகளை மதிப்பீடு செய்யத் தெரியவில்லை” என்றும் “சாதாரண இயக்கங்களோடு ஒப்பிட்டு பார்த்து நாம் எப்படி இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டுமென”வும் கூறினார்.

“234 தொகுதிகளுக்கும் நாங்கள் தகுதியானவர்கள். அது ஆணவத்தில் அல்ல; சமூக மாற்ற பார்வையில் பேசுகிறேன்,” என்றார்.

“ஏமாற்றம் சாத்தியமில்லை”

தற்காலிக லாபங்களுக்காக இயக்கம் நடத்தும் சிலருடனும் விடுதலைச் சிறுத்தைகளை ஒப்பிடுவது தவறு என்றும், “நாங்கள் கடந்துவந்த பாதைகளை புரிந்து கொள்ள அவர்களுக்கு இன்னும் ஆண்டுகள் தேவைப்படும்” என்றும் திருமாவளவன் எடுத்துரைத்தார்.

“எங்களை வெறும் டீ, பன் கொடுத்து சமாளிக்கலாம் என்று யாரும் எண்ண வேண்டாம்” என்ற அவரது வரிகள் பெரும் கவனத்தை ஈர்த்தன.

Exit mobile version