புதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், இன்று (மே 20) சுப்ரீம் கோர்ட்டில் வாதங்கள் தீவிரமாக நடைபெற்றன.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வக்ப் போர்டு சொத்துகளைப் பற்றிய திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகளும், பல முஸ்லிம் அமைப்புகளும் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசு தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வக்ப் சொத்துகள் யாருடையவை என்பதை நிர்ணயிப்பதில் குழப்பம் உள்ளது. கோர்ட், பத்திரம் அல்லது பயனீட்டாளர்களில் யார் உரிமை பெற முடியும் என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது,” என கூறினார்.
மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “இந்த சட்ட திருத்தம் முழு முஸ்லிம் அமைப்புகளின் உரிமையை கைப்பற்றும் நோக்கத்துடன் இயற்றப்பட்டுள்ளது. இது மத வழிபாட்டு உரிமைகளிலும், சிறுபான்மையினரின் உரிமைகளிலும் ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும்,” என்றார்.
மேலும், “ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்தினை மாற்ற முடியாது. இந்த சட்டத்தின் கீழ், பதில் மனு இன்றி கூட, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சொத்துகள் பறிக்கப்படும் நிலை உருவாகும்,” என அவர் எச்சரித்தார்.
இந்த வழக்கில், முந்தைய 1995 வக்ப் சட்ட விதிகளை நிறுத்தி வைப்பதற்கான மனுக்கள் குறித்து எந்தவொரு பரிசீலனையும் செய்ய சுப்ரீம் கோர்ட் தயார் இல்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.