மாணவர்களின் தாகம் தீர்த்த விஜய் வசந்த் மயிலாடி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமின்றி, தனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு சமூகப் நலத்திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், நாகர்கோவில் அருகே மயிலாடி பகுதியில் செயல்பட்டு வரும் ‘றீங்கல் தெளபே’ பள்ளி மாணவ – மாணவிகள் தங்களுக்குத் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என விடுத்த கோரிக்கையினை ஏற்று, தனது சொந்தச் செலவில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அவர் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்திட்டத்தின் திறப்பு விழா இன்று (09-01-2026) பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி அவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (Assembly) பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் திறந்து வைத்த அவர், மாணவர்களிடையே உரையாற்றுகையில், ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கத் தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் அவசியம் என்பதை வலியுறுத்தினார். கல்விப் பணியில் தனது தந்தையைப் போலவே மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், வட்டாரத் தலைவர்கள் தங்கம், நடேசன், சேம்சுரேஷ், மாநகர மாவட்டத் தலைவர் நவீன்குமார், நகரத் தலைவர் நடேசன், காங்கிரஸ் விளையாட்டுத் துறை கிழக்கு மாவட்டத் தலைவர் அருண் மற்றும் பள்ளித் தாளாளர் ஜெரோம், போதகர் ஜெஸ்லின் ஸ்டீபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அரசு நிதி ஒதுக்கீடுகளுக்காகக் காத்திருக்காமல், மாணவர்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து உடனடியாகத் தனது சொந்த நிதியிலிருந்து இந்த உதவியைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயலை பள்ளி நிர்வாகமும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

Exit mobile version