நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார்.
கரூர் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜகவின் கதைப்படி அரசியல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜய்” என குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் “விஜய் கட்சி தொடங்கியது பாஜகவின் ஆலோசனையில்தான் என நாங்கள் ஏற்கனவே கூறி வந்தோம். தமிழ்நாட்டில் திமுகவின் சிறுபான்மை வாக்குகளைப் பிரித்து, மகாராஷ்டிரா மாடலில் ஆட்சியைப் பிடிக்கவே பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக களமிறங்கியுள்ளார் விஜய்.”
“திமுக, பாஜக இரண்டுக்கும் ரகசிய உறவு உள்ளது என கூறுவது, காங்கிரஸுக்கு நெருக்கமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என விஜய் மேற்கொள்ளும் தந்திரங்கள், சிறுபான்மை சமூகத்தை குழப்பும் நோக்கத்துடன் உள்ளவை. தேர்தலுக்கு முன் பாஜக அணியில் சேராமல், தனியே நிற்க வைத்து பின்னர் அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடுகிறது.”
இறுதியாக அவர் சுட்டிக்காட்டியதாவது:
“பாஜகவினர் எழுதித்தரும் அரசியல் நாடக ஸ்கிரிப்டை பேசும் நடிகர்தான் விஜய். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.