கோவை கணபதி பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு இது குறித்து பெண்கள் மத்தியில் உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள்து. இதனால் நாடு முழுவதும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதன் காரணமாக வியாபாரம், பொருளாதாரம் வளரும், உலக அளவில் உள்ள நிதி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என கணித்துள்ளனர் என தெரிவித்தார். வரி குறைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் வரி குறைப்பை செய்யாமல் சில நிறுவனங்கள் ஒரே விலையில் விற்க வாய்ப்பு உள்ளது, எனவே வரி குறைப்பு பற்றி பொதுமக்கள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வியாபார நிறுவனங்கள் விலை வித்யாச பட்டியல் வைக்க வேண்டும் என்றும் வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும், மக்களின் வாங்கும் தன்மை அதிகரிக்கும் என்றார்.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மீண்டும் ஆட்சியமைத்த பெருமை மோடிக்குதான் உண்டு என்றும் மக்களுக்கு உதவி செய்ய மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளார் என்றார். வரி குறைப்பால் தீபாவளிக்கு மிச்சம் செய்யும் பணத்தில், பெண்கள் இரண்டு சேலைகளை கூடுதலாக வாங்க முடியும் என்றார். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை விரைவாக செய்து தந்த மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்துவதை மாநில அரசுதான் செய்ய வேண்டும் என்றும் ஆனால் இது குறித்து முதலமைச்சர் பேசாமல் வேடிக்கை பார்க்கிறார் என்றார்.
கடந்த காலங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்ததால் தான், 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்தது, உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக செயல்படுத்தினோம் என்றும் காங்கிரஸ் கட்சியை போல ஊழல் குற்றச்சாட்டு எங்கள் மீது இல்லை, காங்கிரஸ் எந்தெந்த துறையில் வருமானம் பார்ப்பது என்பது போலில்லாமல், ஜிஎஸ்டி வருமானத்தை திரும்ப மக்களுக்கே தருகிறோம் என்றார்.
வரியே வேண்டாம் என்றால் அரசை எப்படி நடத்துவது? என கேள்வி எழுப்பிய அவர் வரி கட்டுவது பெருமை என்ற நிலையை மோடி கொண்டு வந்துள்ளதாக கூறினார். மக்கள் தரும் வரி, பல்வேறு திட்டங்களாக வருவதாகவும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் அரைகுறை அறிவோடு போடும், கமெண்ட்களை நான் கண்டு கொள்வதில்லை என்றும் கூறினார். ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, ஜிஎஸ்டிக்குள் வராத மற்ற பொருட்கள் கொண்டு வரப்படும், மாநில அரசு ஒத்துழைப்பு தந்தால் பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம் என்றார்.
அண்ணாமலை – டிடிவி தினகரன் சந்திப்பு பற்றிய கேள்விக்கு அந்த தகவல் எனக்கு தெரியாது என்றார். திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என விஜய்தான் கூறுகிறார், திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உண்டு என்றும் திமுகவை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் வெற்றி பெற முடியும் என்றார். பாஜகவில் எந்த கோஷ்டி புசலும் இல்லை. கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் தலைமை கூறியுள்ளது.ல் பலவீனப்படுத்தும் செயல்களை யாரும் செய்யக்கூடாது என்றார். அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்த அவரது முயற்சிகளை செய்கிறார் என்றும் கல்வி நிதியை வைத்து திமுக தான் அரசியல் செய்கிறது என்று கூறினார்.