தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மங்கலப் பொருளான மஞ்சள் கொத்துகளின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவித்திரம், நவலடிப்பட்டி, கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுதோறும் தை மாதப் பிறப்பை இலக்காகக் கொண்டு பயிரிடப்படும் இந்த மஞ்சள் செடிகள், தற்போது நன்கு விளைந்து வயல்வெளிகள் முழுவதும் பச்சை பசேலெனக் காட்சியளிக்கின்றன. இப்பகுதிகளில் விளையும் மஞ்சள் கொத்துகள் தரம் மற்றும் நிறத்தில் சிறந்து விளங்குவதால், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் வழிபாட்டின் போது மஞ்சளின் இலைகள் பசுமையாகவும், வாடாமலும் இருப்பது அதன் மதிப்பைக் கூட்டுகிறது. இதனால், அறுவடைக்குத் தயாராக உள்ள மஞ்சள் செடிகள் அதன் பசுமை மாறாமல் இருப்பதற்காக விவசாயிகள் தற்போது இரவு பகலாகப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தரைப்பகுதியில் மஞ்சள் கிழங்குகள் நன்கு திரட்சியடையவும், இலைகள் கருகாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும் தினசரி நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. எருமப்பட்டி பகுதியில் இருந்து லாரிகள் மூலம் வெளிமாவட்ட சந்தைகளுக்கு அனுப்பப்படும் மஞ்சள் கொத்துகள், பண்டிகை காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் முக்கியப் பயிராக இருந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அனுபவமிக்க விவசாயி பன்னீர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மட்டுமே இலக்காக வைத்து நாங்கள் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த மஞ்சள் கொத்துகள் பொங்கல் பானையைச் சுற்றி கட்டுவதற்கும், பூஜைகளுக்கும் அதிக அளவில் விற்பனையாகும். வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்போது மஞ்சள் இலைகள் உலர்ந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே தற்போது செடிகளுக்குத் தேவையான தண்ணீரைச் சீராகப் பாய்ச்சி மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறோம். இந்த ஆண்டு விளைச்சல் திருப்திகரமாக இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம்,” என உற்சாகத்துடன் தெரிவித்தார். பொங்கல் நெருங்கி வரும் சூழலில், மஞ்சள் கொத்துகளின் வரத்து வரும் நாட்களில் சந்தைகளில் அதிகரிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















