வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்

சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை சிறை பிடித்ததுடன், கண்ணாடியை உடைத்து போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாள்தோறும் இங்கு 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து அருகில் உள்ள இடத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த புதிய கட்டிடம் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளாக தனிநபர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து புதிய கட்டிடம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சித்தா பிரிவில் பழுதடைந்த பொருட்களை சுகாதாரத் துறையினர் லாரியில் ஏற்றியுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள்ஆரம்ப சுகாதார நிலையத்தை காலி செய்வதாக நினைத்து லாரியை மறித்ததுடன், தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கண்ணாடியை உடைத்து, சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டம் இன்று காலையும் தொடர்ந்தது. தகவல் அறிந்த சீர்காழி ஆர்டிஓ. சுரேஷ், தாசில்தார் அருள் ஜோதி மற்றும் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி. ஜெயக்குமார், சீர்காழி டிஎஸ்பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிக்கப்பட்டு வருவாய், சுகாதாரத்துறை சித்தா பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மக்கள் உடன் படாமல் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்களை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் சிறைபிடிக்கப்பட்ட லாரியை மீட்டு எடுத்துச் சென்றனர் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version