திண்டுக்கல் மாவட்டத்தின் மணிமகுடமான கொடைக்கானல் மலைப்பகுதி 60 சதவீதத்திற்கும் அதிகமான அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தச் சுற்றுலாத் தலத்தில் குறிஞ்சி மலர்கள் முதல் அரிய வகை சோலை மரங்கள் வரை பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ள சூழலில், சமீபகாலமாக மேல்மலைக் கிராமங்களில் முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆனைமலைப் புலிகள் காப்பகக் கட்டுப்பாட்டில் உள்ள கிளாவரை, போலூர், கூக்கால், கீழானவயல், அக்கறைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இந்தச் சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு அரசிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு, அதன் மறைவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் அரசு வருவாய் நிலங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் இரவு நேரங்களில் ரகசியமாக வெட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்கள் கிளாவரை கிராமம் அருகே உள்ள ஆள் நடமாட்டமற்ற சாலை ஓரங்களில் மலைபோல் குவிக்கப்படுகின்றன. அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருப்பதற்காக, இந்த மரங்களின் மீது மரப்பட்டைகள் மற்றும் இலை தழைகளைக் கொண்டு மூடி மறைக்கும் நூதன முறையைக் கடத்தல் கும்பல் கையாள்கிறது. பின்னர் இவை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ரகசியமாகத் தரை மார்க்கமாகத் தப்பிச் செல்கின்றன. வனப்பகுதியில் மரங்கள் தொடர்ந்து வேரோடு சாய்க்கப்படுவதால் மலைப்பகுதியின் இயற்கைச் சூழல் முற்றிலுமாகச் சிதைவதுடன், மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுதல் மற்றும் மண் வளம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, காடுகள் அழிக்கப்படுவதால் பசுமைப் போர்வை குறைந்து, வனவிலங்குகள் தங்களின் உணவு மற்றும் இருப்பிடத்தைத் தேடி நகர்ப்புறங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மனித-வனவிலங்கு மோதல்களை அதிகப்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். “இயற்கையின் சொத்தான காடுகளை ஒரு சிலரின் சுயநலத்திற்காக அழிப்பதை அனுமதிக்க முடியாது; வனத்துறை உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டும் கும்பல் மற்றும் அதற்குத் துணையாக இருக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, கொடைக்கானலின் பசுமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
