நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் பூத்துக் குலுங்கும் ‘குயின் ஆப் சைனா’ (Queen of China) என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி (Paulownia fortunei) மலர் மரங்கள், பருவமழை நீடிப்பதன் காரணமாக இந்த ஆண்டு இதுவரை பூக்காமல் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி மலர் மரங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களில் வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துவிடும்.
வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும். இந்த அழகிய காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை இதுவரை விடாமல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்ததன் காரணமாக, ஊட்டியின் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பனிக்காலம் துவங்கினால், பவுலோனியா பார்சினி மலர்கள் பூக்கத் துவங்கிவிடும். ஆனால், தொடர்ச்சியான மழை மற்றும் மேக மூட்டமான வானிலை காரணமாக, இதுவரை ஊட்டியில் உறை பனி விழாமல் உள்ளது. இதன் விளைவாக, வழக்கமான காலக்கெடுவைத் தாண்டி, தற்போதுவரை பவுலோனியா பார்சினி மலர்கள் பூக்காமல் உள்ளன. இதனால், இந்த மலர்களின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
