வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் தென் தமிழகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதிகளில் வழக்கத்தை விட மிக பலத்த காற்று வீசி வருகிறது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் தீவுக்கு வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் காணப்படுகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தொடங்கியது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் காற்றின் வேகம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டியதால், ரயில்களின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் நோக்கிய ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியாவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த விரைவு ரயில் (Ayodhya – Rameswaram Express) மண்டபம் ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. இதேபோல், தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் வந்த விரைவு ரயிலுக்கும் மண்டபத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால், கடும் குளிரிலும் காற்றிலும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்ல வேண்டிய ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் தணிந்து, அபாய அளவு குறைந்த பின்னரே ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்றின் காரணமாக, ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை நேற்று 3-வது நாளாகத் தடை விதித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் இருக்க, மீனவர்கள் அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்துள்ளனர். தனுஷ்கோடி போன்ற தாழ்வான பகுதிகளில் கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வானிலை சீராகும் வரை இந்தப் பாதிப்புகள் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
