கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை இருப்பதால், குடும்பங்களுடன் சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலையில், சூரிய உதயத்தை காண கடற்கரையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஆனால் வானில் மழைக்கான மேகங்கள் ஏற்படுவதால், சூரிய உதயக் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும், அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று ரசித்து வந்தனர். கடலின் நடுவே அமைந்துள்ள கண்ணாடி நடைபாதையில் நடந்து, திருவள்ளுவர் சிலையை நெருக்கமாக பார்த்து புகைப்படங்கள் எடுத்தனர்.
அதேபோல், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண சித்திரக் கண்காட்சி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி மையம், பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட இடங்களிலும் காலை முதலே சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.