ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த டிப்பர் லாரி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரி அம்மாபட்டியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாயக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. லாரி கிணற்றுக்குள் பாய்ந்ததை அறிந்த டிரைவர் உடனடியாகக் குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மாபட்டி. ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம். பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரி, மணல் ஏற்றிக்கொண்டு ராமலிங்கம் தோட்டத்தின் அருகே உள்ள சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே அந்த லாரி அதே வழியில் மூன்று முறை சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது. நான்காவது முறை சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ராமலிங்கத்தின் தோட்டத்தின் அருகே இருந்த திறந்த கிணற்றுக்குள் தலைகீழாகப் பாய்ந்தது.

லாரி கிணற்றுக்குள் விழுவதைக் கண்ட டிரைவர் மின்னல் வேகத்தில் லாரியில் இருந்து வெளியே குதித்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் அவருக்குச் சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தோட்டத்தின் அருகில் இருந்தவர்கள் கிணற்றில் பயங்கரச் சத்தம் கேட்டதையடுத்து ஓடி வந்து பார்த்தபோது, டிப்பர் லாரி கிணற்றுக்குள் கவிழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த நிலைய அலுவலர் கோ. ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரியைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாரி வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்த டிரைவரின் சாமர்த்தியத்தையும், விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினரையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version