கமலுக்கு மிரட்டல் : “முதல்வர் அமைதியாக இருப்பது ஏன் ?” – சீமான் கேள்வி

சென்னை :
“தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்ற வரலாற்று உண்மையை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்ததற்காக, அவருக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் வெளியிட்ட அறிக்கை :
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்ற வரலாற்று உண்மையை பகிர்ந்திருந்தார். இதனை எதிர்த்துச் சில கன்னட அமைப்புகள், அவரது படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம், அவரை மாநிலத்தில் நுழையவிடமாட்டோம் என மிரட்டல்களை விடுத்துள்ளன. கூடவே, மன்னிப்பு கோர வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்படுத்தப்பட்டு, படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டும் அவமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்கும் வரலாற்று பேருண்மையானது – தமிழ் உலகின் பழமையான மொழி என்பதுதான். இந்த அடிப்படையில், கன்னடமும் தமிழின் வேரிலிருந்தே வளர்ந்தது என்பது உண்மையெனக் கூறினார். அதனை ஏற்க மறுக்கும் கன்னட அமைப்புகளின் வன்முறைகள் வருந்தத்தக்கதாகவும், கர்நாடக காங்கிரஸ் அரசு அவற்றை தடுக்காமல் ஊக்குவிப்பது மிகுந்த கவலைக்குரியதெனவும் தெரிவித்துள்ளார்.

“வரலாற்று உண்மையை எதிர்ப்பது என்பது அறிவுசார் அணுகுமுறையல்ல. அதற்கு பதில் வேண்டுமெனில், வரலாற்று ஆதாரங்களையும் மொழியியல் ஆய்வுகளையும் முன்வைத்து எதிர்க்க வேண்டும்,” என்று சீமான் வலியுறுத்தினார்.

“காவிரி பிரச்சனையின் போது, ஸ்டாலினின் உருவப்படத்தை அவமதித்தவர்களுக்கும் எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது கமல்ஹாசன் மீது மிரட்டல் விடுக்கப்படும் தருணத்திலும், அதேபோல் அமைதியாக இருப்பது ஏன் ?” எனக் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழ்த் திரை உலகின் பெருமைமிக்க கலைஞரான கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டியது ஸ்டாலினின் பொறுப்பு” என்றும் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறான சூழ்நிலைகளில், தமிழகத்தின் தலைமை நிர்வாகி மௌனம் காத்திருப்பது, கமல்ஹாசனை மட்டுமல்ல – தமிழையும் அவமதிப்பதாகும்,” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

கடைசியில், “கர்நாடகத்தில் அமைந்துள்ள கன்னட வெறியோடிகளின் மிரட்டல்களை கட்டுப்படுத்த வேண்டி, மாநில அரசுடன் பேசி தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து தனது அறிக்கையை முடித்துள்ளார்.

Exit mobile version