மதுரை :
எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து அவதூறாகக் கருத்து தெரிவித்ததாகவும், கீழடி ஆய்வுகளை கேலி செய்ததாகவும், திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கார்டூன் குறித்து அதிமுக வட்டாரத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஜூன் 17ஆம் தேதி, திமுக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கார்டூனில், எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச் சித்திரம் இடம்பெற்றது. இதையடுத்து, இந்த பதிவுகள் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அவதூறான வார்த்தைகள் மற்றும் சித்திரங்கள் எனக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் முறையீடு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை எஸ்.பி. அரவிந்திடம் மனு அளிக்க, அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர், காவல் ஆணையரிடம் தனித்தனியாக மனுவை சமர்ப்பித்தனர்.
இந்த மனுக்களில், திமுக ஐடி விங் திட்டமிட்டு அவதூறான பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இது எடப்பாடி பழனிசாமியின் பெயரையும், அதிமுகவினரின் மனஉளைச்சலையும் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட பதிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :
“எடப்பாடி பழனிசாமி மீது தவறான தகவல்கள் பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். திமுக ஐடி விங் பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போல தரம் தாழ்ந்த விமர்சனங்கள், அரசியல் மரியாதையை கேள்விக்குள்ளாக்குகின்றன. திமுக அரசு முற்றிலும் அரசியல் ஒழுங்கமைப்பில்லாமல் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. 2026ல் இந்த நிலை நிச்சயமாக மாறும். சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுக எங்களுக்கு தயக்கம் இல்லை,” என்றார்.