முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும்,மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டதுட 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7.20 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்அதிர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
11-ம் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் 12-ம் திருவிழாவில் இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.