முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ கையெழுத்துகளுடன் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு, வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த முகாமில், பட்டா மாறுதல், பெயர் திருத்தம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்த அதிகாரிகள், ஆற்றுப்பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த அந்த மனுக்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிக்கின்றனர், ஆனால் அவை இப்படியாக வீணாகின்றனவா?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மனுக்களை ஆற்றில் வீசியது யார் என்ற குறித்த விவரத்தை அறிய போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
