மயிலாடுதுறை மாவட்டம்
குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி கரையில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு குத்தாலம் செங்கமல தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள், சௌந்தர நாயகி சமேத சோளீஸ்வரர், ஆனந்த வள்ளி அம்பாள் சமேத ஓம் காளீஸ்வரர், ஆதிசக்தி சமேத மன்மதீஸ்வரர், அரும்பன்ன வனமுலை அம்பாள் சமேத உக்தவேதீஸ்வரர் சுவாமிகள், காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தருமபுரம் ஆதீன குருமஹா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனைத்து கோவில்களில் இருந்து பிரசாதம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
















