தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 18,985 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணி இன்று உற்சாகமாகத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தைச் சென்னையில் நேற்று முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், அதன் ஒரு பகுதியாகத் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் பேசுகையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்றுவிடாமல் உலகளாவிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றார். “திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் அரசு ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதற்கட்டமாக 18,985 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், பின்னர் தனியார் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் விரிவுபடுத்தப்படும்” என்று அவர் விரிவான விளக்கமளித்தார்.
இந்த மடிக்கணினிகள் உயர்தரத் தொழில்நுட்ப வசதிகளுடன், மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்கும், வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விழாவில் மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், ப. அப்துல்சமது ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மடிக்கணினிகளை வழங்கினர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, கல்லூரி முதல்வர் அங்கம்மாள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மடிக்கணினியைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், இது தங்களின் உயர்கல்வித் தேடலுக்கும், நவீன காலப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

















