தேனி மாவட்டம் கம்பத்தில், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் என். இராமகிருஷ்ணனை, தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும் தேனி மாவட்டத் தலைவருமான ஆர். சுந்தரவடிவேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழக-கேரள எல்லையான குமுளியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்திற்கு வீரத் தமிழரசி ‘கண்ணகி’ திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் ஆன்மீகக் கோரிக்கைகள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையில் சிதிலமடைந்து காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு நாளில் ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நடைமுறையை மாற்றி, தொடர்ந்து மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும், அங்கு கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
சமூக ரீதியான கோரிக்கையாக, தமிழ்நாட்டின் பெரும் சக்தியாக விளங்கும் வாணியர் சமூகத்தை தற்போதுள்ள பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையையும் சுந்தரவடிவேல் எம்எல்ஏ-விடம் வலியுறுத்தினார். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் என். இராமகிருஷ்ணன், கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டதுடன், இது குறித்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுவதாகவும், தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரியத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின் போது கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்கத் தலைவர் ஜெயபாலன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கனகராஜ், அறங்காவலர் முருகேசன் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். குமுளி பேருந்து நிலையப் பெயர் சூட்டல் மற்றும் கண்ணகி கோவில் மேம்பாடு குறித்த இந்த மனு தேனி மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
