கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழையூரில் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா
கடந்த மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.
அதிரூப வள்ளி ரெங்கநாயகி தாயார் சமேத ரெங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றன.
முன்னதாக பக்தர்கள் 51 வரிசை தட்டுகள் எடுத்து வந்து அர்ப்பணித்தனர். தொடர்ந்து மாலை மாற்றும் வைபோகம் மற்றும் மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
மங்கள இசை ஒலிக்க நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனர்.

Exit mobile version