மயிலாடுதுறை அடையாளமாக கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்பபடையாச்சி முழுஉருவச்சிலை

மயிலாடுதுறையின் அடையாளமாக விளங்கிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்ப படையாச்சி ஆகியோருக்கு மயிலாடுதுறையில் இருவேறு இடங்களில் முழுஉருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழின் முதல் புதினத்தை இயற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறை முன்சீப், நகர்மன்ற தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் திருச்சியில் பிறந்திருந்தாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.

இதேபோல், மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்ட சாமி.நாகப்ப படையாச்சி தென்னாப்பிரிக்க சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் பங்கேற்று அங்கேயே உயிர்நீத்தவர். இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் மயிலாடுதுறையில் சிலை நிறுவ வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று, மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அவர் பணியாற்றி நகர்மன்ற அலுவலக வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது. இதேபோல், தியாகி சாமி.நாகப்ப படையாச்சிக்கு மயிலாடுதுறை நகராட்சி நலவாழ்வு மைய வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது.

இந்த இரண்டு சிலைகளையும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரின் சிலைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், எம்பி சுதா, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version