சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவிய கருத்து முரண்பாடு இன்று வெடிக்கப் பட்டதாகும். கட்சி வெளிப்படையாக இரண்டாகும் சந்தேகங்கள் எழும் அளவிற்கு ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்து, அன்புமணிக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தார்” எனக் கூறிய ராமதாஸ், “35 வயதில் மத்திய அமைச்சராக செய்தது எனது பிழை. அவர் கட்சிக்கே எதிராகப் பல தவறுகள் செய்திருக்கிறார். தருமபுரி கூட்டத்தில் என் மீது நேரடியாகக் குற்றம் சுமத்தியது, அனுதாபம் பெற முயற்சியாக இருந்தது” என்றார்.
பொதுக்குழுவில் நடந்த காட்சிகள் :
“முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததை அன்புமணி மேடையிலேயே காலாட்டிக் கொண்டு மறுத்தார். மைக்கை தூக்கி எனது தலையில் போடாமல் மேஜையில் வீசினார். இது எந்த அளவுக்கு நாகரிகமற்ற செயல் என்பதை மக்கள் பார்க்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.
தந்தை-மகன் நேரடி மோதல் :
அன்புமணியின் தாய் மீது தாக்குதல் செய்ய முயன்றதாகவும், “பொங்கல் சமயத்தில் முகுந்தனின் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டபோது, பாட்டில் எறிந்து தாக்க முயன்றார்” என அதிர்ச்சி கூறினார். “குருவை அவமதித்தவர், தாயை அடிக்க முயன்றவர், கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர் அன்புமணியே” எனவும் ராமதாஸ் கூறினார்.
கட்சி வளர்ச்சிக்கு இடையூறு :
“தருமபுரி, சேலம் பகுதிகளில் நான் பேச கூடாது, கூட்டத்தில் 200 பேருக்கு மேல் வர கூடாது என தடைகள் விதித்தார். கட்சி நிறுவனருக்கே திருமண மண்டபம் கூட வேண்டாம் என ஆணை பிறப்பித்தவர் இவர்” என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் :
“அதிமுகவோடு கூட்டணி செல்லலாம் என நான் கூறியபோது, அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் என் கால்கள் பிடித்துப் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டுமென கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் தான் சம்மதித்தேன்” எனவும் கூறினார்.
“அன்புமணிக்கு தலைவர் பண்பு இல்லை. தகப்பனிடம் தோல்வி அடைவது மானக்கேடு இல்லை. கட்சி மீண்டும் உன்னிடமே வரும் என நம்புகிறேன். ஆனால் நீ செய்த தவறுகளை மறக்க முடியாது” என கடுமையான வார்த்தைகளில் அவரது மகனை எச்சரித்தார்.