தமிழகத்தை நனைக்கும் ஜனவரி மழை வட சென்னையில் 11 செ.மீ. கொட்டித் தீர்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைப் பருவம் முடிந்த பின்னரும், வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புத்தாண்டு தினத்தன்று சென்னையின் வடக்குப் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை பெரம்பூரில் அதிகபட்சமாக 110 மி.மீ (11 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. எண்ணூரில் 100 மி.மீ, கத்திவாக்கத்தில் 70 மி.மீ எனப் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டன.

தற்போது நிலவும் வானிலைச் சூழல் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, லட்சத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதிகளுக்கு மேலாக ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலைகொண்டுள்ளது. அதேபோல், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் மற்றொரு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரண்டு சுழற்சிகளின் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரி 4 முதல் 7 வரை பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், மீண்டும் 8-ஆம் தேதி முதல் மழைப் பொழிவு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களுக்குக் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேசமயம், ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2°C முதல் 4°C வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கையில், தென் தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், ஜனவரி 5-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version