திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானச் சேவைகளும் போர் பதற்றம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவம் மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த அபாயகரமான சூழல் காரணமாக பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், அபுதாபி மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. இதன் நேரடி விளைவாக, திருச்சியிலிருந்து இந்த நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, சனிக்கிழமை பிற்பகல் திருச்சியிலிருந்து 145 பயணிகளுடன் துபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வான்வெளிப் பகுதியில் நிலவிய போர் பதற்றம் காரணமாகப் பாதி வழியிலேயே திருப்பி விடப்பட்டு மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரை இறக்கப்பட்டது. நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு பல்வேறு விமான நிறுவனங்களும் திருச்சி சர்வதேச விமான நிலைய நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் பதற்றம்: போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவைகள் அதிரடி ரத்து!
-
By sowmiarajan

- Categories: News
- Tags: cancellationdisruptionflighttravelTrichy airport
Related Content
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்
By
Satheesa
March 2, 2026