ஓசூர்: டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஓசூர் தொழிற்சாலையில் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16e ஆகிய மாடல்களின் அசெம்பிளிங் பணியைத் தொடங்கியுள்ளது. இது, ஸ்மார்ட்போன் விநியோகச் சங்கிலியில் டாடா ஒரு முக்கிய பங்கேற்பாளராக உருவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் போன்ற தைவானிய நிறுவனங்கள் ஆப்பிளின் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றி வந்தன. தற்போது அந்த நிலையை மாற்றும் வகையில், டாடா தனது ஓசூர் தொழிற்சாலையில் ஒரு புதிய அசெம்பிளி யூனிட்டை அமைத்து செயல்படுத்தியுள்ளது.
முந்தைய நிலவரப்படி, டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் ஐபோனுக்கான உறைகள் (casings) மட்டுமே உற்பத்தி செய்துவந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தில் இரண்டு புதிய அசெம்பிளி லைன்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லைனும் சுமார் 2,500 பேர் வரை பணியமர்த்தக்கூடியது என கூறப்படுகிறது. இந்த ஆலை முழுமையான (End-to-End) அசெம்பிளிங் வசதியுடன் இயங்குகிறது.
இந்த புதிய யூனிட் தற்போது அதன் முழு கொள்ளளவில் இயங்கிவருகிறது. மேலும், இது டாடா எலக்ட்ரானிக்ஸின் விஸ்ட்ரான் தொழிற்சாலையைவிட பெரியதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தன்னுடைய வளர்ச்சியை வேகமாக நீட்டித்து வருகிறது. அதற்காக, ஆப்பிளின் மற்ற இந்திய சப்ளையர்களான விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரானின் இந்திய கிளைகளையும் கையகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, சீனாவுக்கு வெளியே உற்பத்தி மையங்களை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்பில் வேகமான வளர்ச்சி மற்றும் செயல்திறன் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இது, உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி தேவைகளை நிறைவேற்றுவதோடு, ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலி அபாயத்தையும் குறைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.